புது தில்லி, மே 6
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 9.8 சதமாக குறைப்பதாக சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ்&பி கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்&பி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கோவிட் தொற்று பேரிடரால் இந்தியாவின் பொது முடக்க கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து மீண்டும் வேகமெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அரசின் நிதி ஊக்குவிப்பு சலுகை திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக நடப்பு 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 சதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், தற்போது நாட்டின் கோவிட் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொருளாதார மீட்சி தடம்புரண்டுள்ளதுடன், கடன் நடவடிக்கைகளும் மிக மோசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவிட் பாதிப்பு மே மாதத்தில் உச்சநிலையைத் தொட்டு மிதமான அளவில் இருக்கும்பட்சத்தில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.8 சதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கோவிட் தாக்கம் ஜூன் இறுதியில் உச்சநிலையை அடைந்து பாதிப்பு மோசமான சூழ்நிலையை அடையும்பட்சத்தில் இந்த வளர்ச்சி விகிதம் 8.2 சதமாக சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான கடன் தர மதிப்பீடு தற்போது “பிபிபி-‘ நிலையானது என்ற பிரிவில் உள்ளது. வரும் காலத்தில் பொருளாதார வேக தணிப்பின் ஆழத்தைப் பொருத்து இந்தியாவின் கடன் தகுதி நிர்ணயம் செய்யப்படும் என எஸ்&பி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.