புது தில்லி, ஏப்.28
கோவிட் தொற்றின் 2ம் பரவல் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆப்பிள் நன்கொடை அளிக்க ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
நாட்டில் கோவிட் தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் பேர் வரை புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆப்பிள் நன்கொடை அளிக்கும் என டிம் குக் தெரிவித்துள்ளார்
இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கோவிட் பரவலின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் ஆப்பிள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கவனமும் இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவில் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் தொடரை எதிர்த்து போராடி வரும் மக்கள் மீதும் தான் உள்ளது. அதன் காரணமாக ஆப்பிள் தனது ஆதரவை இந்தியாவிற்கு தெரிவித்து கொள்வதோடு மீட்பு நடவடிக்கைக்காக நன்கொடையும் அளிக்கும் என அவர் உறுதி கொடுத்துள்ளார்.
இருப்பினும் ஆப்பிள் எவ்வளவு நன்கொடை அளிக்கிறது என்பதை அவர் குறிப்பிடவில்லை. அண்மையில், கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லாவும் இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.