இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் இன்றி மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கும் அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் விளைபொருட்களை வாங்கும் போது அவற்றுக்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அவற்றின் இயற்கை தன்மை உறுதி செய்யப்படுகிறது. இச்சூழ்நிலையில் தரச் சான்று என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.
தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் அலுவலகம் வழியாக அங்கக சான்றளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின் படி அபீடா (APEDA) நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
அங்ககசான்றளிப்பு பணி தனிநபர் பதிவு, குழு பதிவு மற்றும் பெரு வணிக/நிறுவன பதிவு என பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. பயிர் உற்பத்தியுடன் கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் கையாளுதல், தேனீ வளர்ப்பு மற்றும் வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோர்களும் அங்ககச் சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பபடிவம் (3 நகல்கள்), பண்ணையின் பொது விபரக் குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம் (3 நகல்கள்), துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நிலஆவணம் (சிட்டா), வருமான வரி கணக்கு நிரந்தர அட்டை, ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் பதிவு கட்டணம் நேரடியாகவோ அல்லது இணைய வழி ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
பதிவு கட்டணம் சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2700/-ம், இதர விவசாயிகள் ரூ.3200/-ம் செலுத்த வேண்டும். குழுவாக பதிவு செய்ய ரூ.7200/-ம் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400/-ம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.