புது தில்லி, ஏப்.22
கடந்த மார்ச் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 78.22 லட்சமாக குறைந்துள்ளதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
இது குறித்து டிஜிசிஏ மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை 78.27 லட்சமாக இருந்தது. மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 78.22 லட்சமாக சரிந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரியில் உள்நாட்டில் 77.34 லட்சம் பேர் விமானப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். மார்ச் மாதத்தில் இண்டிகோ அதிகபட்சமாக 41.85 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. இது, உள்நாட்டு விமானச் சந்தையில் 54 சத பங்களிப்பாகும். இதைத் தொடர்ந்து, ஸ்பைஸ் ஜெட் 10.03 லட்சம் பயணிகளை கையாண்டு 12.8 சத சந்தைப் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் மாதத்தில் ஏர் இந்தியா, கோஏர், விஸ்டாரா, ஏர் ஏசியா நிறுவனங்கள் முறையே 9.17 லட்சம், 6.12 லட்சம், 5 லட்சம் மற்றும் 5.42 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றன. ஆறு முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் இருக்கை நிரம்பும் விகிதம் 64.5 சதம் மற்றும் 76.5 சதம் என்ற அளவில் இருந்ததாக டிஜிசிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.