புது தில்லி, மே 8
ஊழியர்களின் வருகைப் பதிவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து துறைச் செயலர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வீட்டில் இருந்து பணியாற்றலாம். கோவிட் கட்டுப்பாட்டு உள்ள பகுதியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் அந்தக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரை அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அனைத்துப் பணியாளர்களின் வருகைப் பதிவையும் சம்பந்தப்பட்ட துறைச் செயலர்கள் கண்டிப்பாக பதிவு செய்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் தொலைபேசி, தகவல் தொழில்நுட்பவியல் உதவியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அலுவலகத்தில் பணியாற்ற வருபவர்கள் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஆலோசனைக் கூட்டங்கள் இணைவழியில் மட்டும் நடத்தப்பட வேண்டும். பார்வையாளர்களுடனான சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். மின்னணு வருகைப் பதிவு ரத்து செய்யப்படுகிறது என்று கடந்த மாதம் மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.