விழுப்புரம், ஜூலை 13
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சென்னை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஜி.வளர்மதி, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் கொள்முதல் செய்யப்படும் விதை குவியல்களுக்கான கொள்முதல் பட்டியல், பகுப்பாய்வு அறிக்கை நகல், பதிவுச்சான்று ஆகிய ஆவணங்கள் பெறப்பட்டு, இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை பட்டியல் முறைப்படி பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். விதைக்குவியல் உண்மை இருப்பும் பதிவேட்டின் இருப்பும் சரியாக இருக்க வேண்டும் என கூறினார். பருவத்திற்கேற்ற தரமான, சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குமாறு தெரிவித்தார். இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம், சித்தானங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1.91 ஏக்கர் கம்பு தனசக்தி சா.நி 1 விதைப்பண்ணையை ஆய்வு செய்த அவர் விதை உற்பத்தியை பெருக்க தேவையான தொழில்நுட்பங்களை விவசாயிக்கு எடுத்துக்கூறினார்.