மத்திய அமைச்சர் உரை
கோவை, மே 5
நாட்டில் கயிறு பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் பங்களிப்பை கூடுதலாக்குகிறது என்றும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே கூறியுள்ளார்.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவின் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் மே 5 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கயிறு மாநாடு 2022-ஐ தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். ‘கழிவுப் பொருளிலிருந்து செல்வம்’ என்பதற்கு நல்ல உதாரணமாக கயிறு பொருட்கள் விளங்குகின்றன என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு உகந்ததான இது தண்ணீர் மற்றும் மண்வள பாதுகாப்புக்கும் உதவுகிறது என்று தெரிவித்தார்.
தென்னை வளர்ப்பு, மாநிலங்களின் ஊரகப் பகுதிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கயிறு பொருட்கள் தொழில்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது என்று கூறிய அமைச்சர். நாட்டின் தென்பகுதிகளில் மட்டும் உள்ள தென்னை வளர்ப்பை இதர மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்த தமது அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். வீட்டு உபயோகம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் கயிறு பொருட்களை பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா பேசுகையில், கயிறு மற்றும் கயிறு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த முயற்சியை ஏற்படுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றார். கயிறு தொழிற்சாலையை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும், கூடுதலாக ஒருங்கிணைந்த முறையில், மத்திய, மாநில அரசுகளுக்கு நிரந்தரமான அடித்தளத்தை இது வழங்கும் என்றும் அவர் கூறினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் பி பி ஸ்வெயின் பேசுகையில், கயிறு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க முழுமையாக தானியங்கி எந்திரங்களை உருவாக்க கயிறு வாரியம் திட்டமிட்டு வருகிறது என்றார். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்வதில், தொழில்துறையினர், கவனம் செலுத்த அவர் அறிவுறுத்தினார். கயிறு பொருட்கள் தற்போது 106 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், புதிய சந்தைகளை கண்டறிய ஏராளமான வாய்ப்புள்ளதாகவும் திரு ஸ்வெயின் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 44 கயிறு மற்றும் கயிறு பொருட்கள், உற்பத்தி / ஏற்றுமதி பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.