கொரோனா நிதியளித்த காவலாளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார். இது தொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ‘கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவீர்’ என்று முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், சென்னை, சாலிகிராமத்தில், தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவுக் காவலராகப் பணிபுரிந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தங்கதுரை (வயது 59) தனது ஒரு மாத சம்பளத்தை, பொதுப் போக்குவரத்து தற்போது இல்லாத சூழ்நிலையில், மிதிவண்டியில் வந்து, முதலமைச்சர் நேரில் சந்தித்துவழங்க முயற்சித்து, முதலமைச்சரின் அலுவல் பணி காரணமாக, அவரை நேரில் சந்தித்து வழங்க இயலாததால், தனது ஒரு மாத ஊதியமான ரூ. 10,101/-ஐ அரசுக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதை அறிந்த முதலமைச்சர், தங்கதுரையை இன்று (14-5-2021) நேரில் அழைத்து, நிதி வழங்கியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவருக்கு தனது அன்புப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்.