புது தில்லி, ஏப்.20
கோவிட் தொற்று முதல் அலையின் போது இருந்ததை விட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விரிவான செய்தியாவது: நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய, இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
கோவிட் முதல் அலையின் போது 41.1 சதம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. அது 2வது அலையின் போது இது 54.5 சதமாக அதிகரித்துள்ளது.
கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும் வென்டிலேட்டர்கள் தேவை முதல் அலையின் போது 37.3 சதமாக இருந்தது. ஆனால் 2வது அலையில் இது 27.7 சதமாக குறைந்துள்ளது என்றார்.
முன்னதாக, கோவிட் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கு அவற்றை வினியோகிப்பதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 9 வகையான தொழிற்சாலைகளில் மட்டுமே இனி ஆக்சிஜனை பயன்படுத்த அனுமதி அளித்து மற்ற தொழிற்சாலைகளுக்கு அதன் வினியோகத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.