ஜெனீவா, மே 6
சர்வதேச அளவில் கோவிட் தொற்று இன்னும் பின்னடைவு சந்திக்கவில்லை என்றாலும் பிறநாடுகளை ஒப்பிடும்போது தற்போது உலக அளவில் பதிவாகும் மொத்த கோவிட் தொற்று பாதிப்பில் 46 சதம் இந்தியாவில் பதிவாகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கோவிட் தொற்றின் 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்படும் தினசரி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால், இந்தியாவில் இதுவரை மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 2 கோடியை கடந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் இருமுறை உருமாறிய கோவிட் தொற்று பெரிய அளவில் பரவி பீதியைக் கிளப்பி வருகிறது. இந் நிலையில், உலக அளவில் ஏற்படும் புதிய பாதிப்புகளில் 46 சதம் இந்தியாவில் மட்டும் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20 சதம் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் வாராந்திர பெருந்தொற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை பெருமளவில் பதிவாகமல் இருக்கக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதன்படி பார்த்தால் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.