புது தில்லி, மே 4
நாட்டில் கோவிட் நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட் நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது என்றார். மேலும், இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.
லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. நிறைய பேர் சி.டி. செய்வதே முக்கியம் என்று கருதுகிறார்கள். லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டு தனிமையில் இருப்பதே நல்லது. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம். இவ்வாறு ரந்திப் குலேரியா தெரிவித்துள்ளார்.