வாசிங்டன், ஏப்.24
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள் ஆகும். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.
அதே நேரம், அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது மட்டும் ஒரு டோஸ் தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமை அத் தடையை நீக்க பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.