லண்டன், டிச.24
புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் தொற்று 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளதாக டபிள்யூயஹச்ஓ அண்மையில் தெரிவித்துள்ளது.
வேகமாக பரவக்கூடிய இந்த தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் குறைவான நாட்களிலேயே அதிக நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த தொற்று முன்பு உருவான டெல்டா வகை கொரோனாவை விட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் டெல்டா வகை வைரசை விட ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதம் வரை குறைவாக உள்ளது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லண்டன் இம்பீரியர் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது:
ஒட்டுமொத்தமாக டெல்டா வகை தொற்றுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். டெல்டா வகை தொற்றை விட ஒமைக்ரான் தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதம் வரை குறைவாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.