ஜெனீவா, மே 18
நீண்ட நேரம் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பு, மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 2000-2016 காலகட்டத்தில் உள்ள தரவுகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், நீண்ட நேரம் வேலை பார்த்த ஊழியர்களில் பக்கவாதம் மற்றும் இதய நோயால் உயிரிழப்பு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் நீண்ட வேலை நேரத்துடன் தொடர்புடைய பக்கவாதம் மற்றும் இதய நோயால் 745,000 பேர் இறந்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது 2000-ல் ஏற்பட்ட உயிரிழப்பை விட 30 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குநர் மரிய நீரா தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் (72%) ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்பது ஆய்வு முடிவு காட்டுகிறது. வேலையில் இருந்த காலங்களில் ஏற்பட்ட மரணங்களைவிட, வாழ்க்கையின் பிற்பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மரணங்க¼ள அதிகம். 194 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளின்படி, ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் வேலை செய்வது 35 சதவீதம் பக்கவாதம் ஏற்படவும், 35 மணி முதல் 40 மணி நேரம் வேலை பார்ப்பது 17 சதவீதம் இதய நோய் ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது.