திண்டுக்கல், ஏப்.29
நோய் தாக்குதலால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், குளிர்பானம் தயாரிப்பதற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு இதற்கு மாறாக மாங்காய் சீசன் தலைகீழாக மாறிவிட்டது. தொடர் மழை மற்றும் மாமரங்களில் பூக்களில் நோய் தாக்குதலால் மா பிஞ்சு எடுப்பதற்கு முன்பாகவே பூக்கள் உதிர்ந்து மற்றும் பிஞ்சுகள் இன்றி வெற்று மரங்களாக காணப்படுகிறது.
இது குறித்து வத்திபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி கூறியதாவது : தற்போது மாங்காய்க்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ஆதலால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்ததால் மாமரங்களில் பூக்கள் தாமதமாகவே பூக்க தொடங்கியது.
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் மரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்தது. இந்த பூக்கள் வெயிலில் கருகி உதிர்ந்து விடாமல் இருப்பதற்காக மருந்துகளை வாங்கி தெளித்தோம்.
மா பிஞ்சு காய்க்கும் நேரத்தில் மரங்களில் செல் நோய், தேன் நோய், பூக்களில் புழுக்கள் என மாறி, மாறி நோய் தாக்கியதாலும் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையினாலும் மரத்திலிருந்து பூக்கள் மொத்தமாக உதிர்ந்துவிட்டது.