நவீன பால் கறக்கும் இயந்திரத்தின் மூலம் விரைவாகவும் திறமையாகவும் கறக்கலாம். முறையாகப் பொருத்த சரியாக பயன்படுத்தினால் மடியில் காயம் ஏதுமின்றி குறைந்த நேரத்தில் அதிக பல்கறக்கலாம். பால் கறக்கும் இயந்திரம் இரண்டு முக்கிய செயல்களைச் செய்கிறது. இது பகுதி வெற்றிடத்தைப் பயன்படுத்தி சிறிய கோடு போன்ற கால்வாய் வழியே, காம்பிலிருந்து பாலை சுரக்கச் செய்து, சேகரிக்கும் பாத்திரத்தில் சேர்த்து விடுகிறது. மேலும் இது காம்புகளை மசாஜ் செய்வதால் பால் மற்றும் இரத்தம் ஒரிடத்தில் குவியாமல் சீராகப் பரவியிருக்கச் செய்கிறது.
பயன்கள்
இதன் பயன்பாடு எளிது எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். விலை குறைவு, நேர விரயம் குறைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வியந்திரம் நிமிடத்திற்க 1.5 லிருந்து 2 லிட்டர் வரை கறைக்கிறது. மேலும் இது சுகாதாரமான முறையாகும். அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கையாள்வது எளிது மடியில் உள்ள பால் முழுவதையும் கறக்கக் கூடியது. அதோடு இவ்வியந்திரத்தில் கறக்கும் போது கன்று ஊட்டுவதைப் போலவே இருப்பதோடு வலியும் ஏற்படுத்துவதில்லை. பால் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
பால் கறக்கும் இயந்திரத்தின் பயன்பாடு
இந்த இயந்திரமானது அதிக அளவு கால்நடைகள் வளர்க்கப்படும் பண்ணைகளில், பால் கறத்தலை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது. இது அதிக அளவில் பயன்படுத்தப்படாவிடிலும் சரியான கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாண்டால் இதலிருந்து முழுமையான பயனை அடையலாம். பால் கறப்பவர்க்கு அந்த இயந்திரம் பற்றி அறிந்து கொள்ள அதைப்பற்றி அறிந்த (அ) அதைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து பயிற்சி அளித்தல் அவசியம். பயிற்சி அளிப்பவர் பால் உருவாகும் முறை, இயந்திரத்தைக் கையாளுதல், அதன் அமைப்பு, பராமரிப்பு, பால் கறத்தல் ஆகிய அனைத்தையும் நன்கு தெரிந்தவராக இருத்தல் வேண்டும். இயந்திரம் மூலம் கறப்பதற்கு ஏற்றவாறு பண்ணையின் பால் கறக்கும் கொட்டில் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். எருமையின் காம்பு, மடிகள் எந்த பாதிப்போ, காயமோ இன்றி இருக்க வேண்டும். சில வயது முதிர்ந்த எருமைகள் கையினால் கறப்பதில் பழக்கப்படுத்தப்பட்டவை. புதிய முறையை ஏற்றுக் கொள்ளாது.
மேலும் சில இளம் எருமைகளைப் பால் கறக்கப் பழக்கப்படுத்தவே சில நாட்கள் ஆகும். இந்த எருமைகளில் கையினால் கறப்பதே சிறந்தது. மிகச்சிறிய அல்லது பெரிய காம்புடைய எருமைகளிலும் கையினால் மட்டுமே கறக்க வேண்டும். சினை மாடுகள் வெப்பமான இயந்திரம் கொண்டு கறப்பதை விரும்புவதில்லை. இயந்திரம் பயன்படுத்துவதன் மூலம் வரும் சிறு இரைச்சல் ஒரு சில கால்நடைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். இது போன்ற எருமைகளில் முதலில் கையினால் பீய்ச்ச வேண்டும். ஆனாலும் இயந்திரத்தை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்களில் அந்த சப்தத்திற்குப் பழகிவிடும். பின்னர் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். எருமையை கட்டி வைத்த பின்னரே இயந்திரத்தைக் காம்பில் மாட்ட வேண்டும். இல்லையெனில் அது கட்டுப்படாமல் அங்குமிங்கும் ஓடித் தாவி விடக்கூடும். முதலில் பீய்ச்சும் போது அந்த இயந்திரத்தை ஒவ்வொரு எருமையாக எடுத்துச் சென்று அது முகர்ந்து பார்த்த பின்னரே பால் பீய்ச்ச அனுமதிக்க வேண்டும்.
அப்போது தான் எருமைகள் இயந்திரங்களைப் பயமின்றி ஏற்றுக் கொள்ளும். மேற்கூறிய முறைகளைக் கையாண்ட பின்னரும் இயந்திரத்தை ஏற்றுக் கொள்ளாத எருமைகளை கையினால் கறக்கும் முறைக்கேப ழக்கி விடவேண்டும். இல்லையெனில் இந்த ஒரு சில எருமைகள் மொத்த மந்தையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். மேலும் பால் கறப்பவர் இயந்திரத்தைப் பொருத்தி விட்டு அங்கேயே நின்று எருமை ஏற்றுக் கொள்கிறதோ, பயப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். சில நாட்களுக்கு இயந்திரத்தைப் பழக்கப்படுத்தும் வரை எருமையின் அருகிலேயே நின்று மென்மையாகத் தடவுதலும், மெதுவாகப் பேசுதலும் வேண்டும். கால்நடைகள் இயந்திர கறத்தலுக்குப் பழகுவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.