சேலம், ஜூன் 13
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லை. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு 4,190 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. நேற்று காலை மேலும் சரிந்து 3,672 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த மாதம் 24ம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 8ந் தேதி வினாடிக்கு 8,000 கன அடி வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், 9ம் தேதி வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை முதல் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 114.10 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 113.53 அடியாக சரிந்தது.
Spread the love