கரூர், ஜூன் 14
கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பூவன் வாழை மற்றும் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். வாழைத்தார் விளைந்ததும் பறித்து பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.500க்கும், கற்பூரவள்ளி ரூ.400க்கும், ரஸ்தாளி ரூ.300க்கும், பச்சை நாடன் ரூ.250க்கும், மொந்தன் ரூ.300க்கும் வாங்கி சென்றனர். இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.600க்கும், கற்பூரவள்ளி ரூ.500க்கும், ரஸ்தாளி ரூ.350க்கும், பச்சை நாடன் ரூ.300க்கும், மொந்தன் ரூ.350க்கும் வாங்கி சென்றனர். வரத்து குறைவாக இருந்ததாலும், கோவில் மற்றும் திருமண நிகழ்வுகள் அதிக அளவில் இருந்ததாலும் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Spread the love