திருவாரூர், ஜூன் 17
திருவாரூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத்திட்டம் (அட்மா) கீழ் கல்யாணசுந்தரபுரம் ஊராட்சி கழனிவாசலில் 14.06.2022 அன்று விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி செய்தல் குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் திருவாரூர் வட்டார விதை சான்று மற்றும் அங்கக சான்றுதுறை அலுவலர் சதீஷ், தரமான விதை உற்பத்தி செய்தல் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். அவர் கூறுகையில் விவசாயிகள் விதை உற்பத்தியாளர்களாக மாறவேண்டும், தாங்கள் பயன்படுத்தும் விதைகளை தாங்களாகவே உற்பத்தி செய்வதன்மூலம் விதை தட்டுப்பாடு ஏற்படாமல், தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்திடலாம் என கேட்டுக்கொண்டார். மேலும் விதை உற்பத்தி செய்திட தங்கள் வயல் பகுதியினை முறையாக பராமரித்திட வேண்டும், விதை உற்பத்தி செய்திடும் பகுதியானது ஒரே இடத்தில் அமைவது சிறந்தது, வேளாண்மைத்துறை மற்றும் விதைச்சான்று துறை அலுவலர்களின் ஆலோசனைப்படி தரமான விதைகளை தேர்வு செய்தல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, கலவன் நீக்குதல், ஈரப்பதம் மற்றும் காலத்தில் அறுவடை செய்தல் போன்ற தரமான விதைகள் உற்பத்தி செய்து அட்டை கட்டுதல் வரை அலுவலர்களின் ஆலோசனைப்படி தொழில்நுட்பங்களை பின்பற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திருவாரூர் வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் கூறுகையில், பயிர் சாகுபடிக்கு மண் ஆதாரமாக உள்ளது. எனவே மண் மேலாண்மை செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்திடவேண்டும். மண் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் பயிரிடும் பயிர் செழிப்பாக வளரும், நாம் இடும் உரங்கள் பயரிருக்கு கிடைக்க மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் காரணமாக இருக்கிறது. எனவே நுண்ணுயிர் பெருக்கத்தினை அதிகரித்திட வேண்டும். எனவே விவசாயிகள் கோடை உழவு, மண்பரிசோதனை, பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி, பண்ணை தொழுஉரங்களை இடுதல் போன்ற இயற்கை சார்ந்த தொழில்நுட்பங்களை கையாளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.