புதுக்கோட்டை, ஜூன் 10
இயற்கை முறையில் இரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும் அதன்மூலம் விளைவிக்கப்படும் விளைபொருள்களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையால் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கும்பொழுது அவற்றிற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அவற்றின் இயற்கை தன்மை உறுதி செய்யப்படுகிறது. எனவே அதற்கான தரச்சான்று என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ் மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுவதால் இந்த தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளைபொருள்களை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
அங்ககச்சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விபரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்;பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், பட்டா சிட்டா, நிரந்தர கணக்கு எண் (PAN CARD) அட்டை நகல், ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்ககச்சான்றளிப்பிற்கு தனி நபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம். அங்கக விளைபொருள்களை பதன் செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக்கட்டணம் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.2700 எனவும் பிற விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.3200 எனவும் குழு பதிவிற்கு ரூ.7200 எனவும் பெரு வணிக நிறுவனங்களுக்கு ரூ.9200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.