சென்னை, மே 20
தமிழகத்தில் கரோனாவினால் ஏற்பட்ட 2வது அலை தாக்குதலை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளை களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஊரடங்கு காலத்திலும் செயல்பட்டு வருகின்றன. எனவே, விவசாயிகள் கீழக்கண்ட வசதிகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நவீன சேமிப்புகிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள்வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிகவிலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திடலாம். கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை விவசாயிகள் அடமானத்தில் பேரில் அதிகபட்சம் 75 சத சந்தை மதிப்பு அல்லது ரூபாய் 3 இலட்சம் இவற்றில் எதுகுறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனாக பெற்றிடலாம். கடனிற்கான காலஅளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதமாகும்.
பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குளிர்சாதனக்கிடங்கு வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் அழுகக்கூடிய பொருட்களை இக்கிடங்குகளில் வைத்து பாதுகாத்திடலாம். மேலும் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி விளைபொருட்களை பாதுகாத்திடலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்திட மாநில அளவில் 044 22253884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அளவில் விளைபொருட்களை விற்பனை செய்தல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவைக்கு வேளாண் விற்பனைத் துறையின் விற்பனைக் குழு செயலர் / வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.