திண்டுக்கல், மே 10
நிலக்கோட்டை பகுதி வைகையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சோத்துப்பாறை அணை நிரம்பி, அதில் இருந்து வராக நதி் வழியாக வைகை ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. இதனால் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த பக்தர்கள், பொதுமக்களிடம் வைகை ஆற்றில் சுமார் 7,000 கன அடி தண்ணீர் வருகிறது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கோடைகாலத்தில் இந்த ஆண்டுதான் வைகை ஆற்றில் இவ்வளவு அதிகமான தண்ணீரை பார்க்கிறோம் என்றனர்.