முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மாரச் 9
3 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், 2020-2021ம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மூர்த்தி, பொன்னு புதியவன், லட்சுமி தேவி ஆகியோருக்கு விருதுகளையும், பரிசுத் தொகைகளையும் நேற்று முன்தினம் வழங்கி சிறப்பித்தார். தற்போது நடைமுறையில் பயன்படுத்தும் நெல் ரகங்களில் அத்தியாவசிய தாதுக்கள் போதுமான அளவு கிடைக்காததால், விவசாயிகள் மருத்துவக்குணம் அதிகம் நிறைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து ஊக்குவித்திடும் விதமாக ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதை’ தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2020-21ம் ஆண்டிற்கான ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது’, கருப்பு கவுணி ரகம் சாகுபடி செய்து எக்டருக்கு 10,672.5 கிலோ அதிக மகசூல் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மூர்த்திக்கு விருதுடன் பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், வாசனை சீரக சம்பா ரகம் சாகுபடி செய்து எக்டருக்கு 10,200 கிலோ மகசூல் பெற்று இரண்டாம் இடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னு புதியவனுக்கு விருதுடன் பரிசுத்தொகை ரூ.75,000 காசோலையும், ஆத்தூர் கிச்சிலி சம்பா சாகுபடி செய்து எக்டருக்கு 10,024.875 கிலோ மகசூல் பெற்று மூன்றாவது இடம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிதேவிக்கு விருதுடன் ரூ.50,000 காசோலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.